தேகம் சிலிர்க்கும் இளமஞ்சள் வெயிலில்
கதிரவன் பொழுது சாயும் நேரம் அது
இளங்கதிர் வெளிச்சத்தில் ஊர் முழுக்க
மஞ்சள் வண்ண மலர்களை
கொட்டி நிரப்பியது போல்
அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக அமைந்தது,
காலை வயலுக்கு சென்ற விவசாயிகள்
மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினர்
தங்கள் கை கால்களை
சொம்பு தண்ணியில் கழுவியபடி,
பள்ளிக்கூடம் முடிந்து ஊரில் இருக்கும்
மழலைகள் யாவும் வேற்று உடை மாற்றி
அவர் அவர்களுக்கு பிடித்த கபடி,
கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுக்களை
விளையாடிக்கொண்டிருந்தனர் கூட்டு சேர்த்து,
ஊரில் உள்ள பெண்கள் யாவரும்
தங்கள் வீட்டில் கடவுளை வழிபட்டு
அந்த அட்சய பொன்பாத்திரத்தில்
நீர் நிரப்பிக்கொண்டு தங்கள் வீட்டின்
விளக்கை ஏற்றிய வண்ணம்
வீட்டின் தொலைகாட்சி பெட்டியில்
தங்கள் இஷ்ட தெய்வத்தின் பாடல்களை
ஒலித்த வண்ணம் அன்றைய இரவு உணவுக்கு
வேண்டிய உணவுகளை தயார் செய்ய
அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்
அந்த டீ கடையில் சூடான டீயுடன் ஆண்கள்
அன்று விவசாயத்தின் விளைச்சல்கள்
மற்றும் ஒன்றத்துக்கும் உதவாத இத்துப்போன
நம்ம ஊரு அரசியல் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்
கூட்டு சேர்ந்த வண்ணம்
தெருவுக்கு தெரு இருக்கும் கோவில்களில்
சாயங்காலம் ஆறு மணி பூஜை தொடங்கி
அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை
அனைவருக்கும் கொடுத்தனர்,
அந்த பக்கம் ஆஞ்சநேயர் கோவிலில்
உழுந்த வடையும் வெண்ணையும் கொடுத்தனர்,
அதனுடன் இயற்கை மருந்தான
தூய்மையான துளசி நீரை
சிறிதளவு உள்ளங்கையில் ஊற்றிவிட்டு
நெற்றியில் செந்தூரத்தை வைத்து விடுவார்கள்,
அந்த பொன் பாத்திரத்தில் இருக்கும்
துளசி நீரை அப்படியே எடுத்து குடிக்க ஆசை தான்
எல்லோருக்கும் ஆனால் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி
கொடுக்கமாட்டிராரே என்ன செய்ய..?
பொழுது சாய்ந்தது
ஊரில் இருக்கும் அனைவரும்
சாப்பிட்டு உறங்கும் நேரம் வந்துவிட்டது,
தெரு விளக்கு மட்டுமே அந்த ஊரின் சாலைகளில்
தங்கள் மஞ்சள் வண்ண கதிர்களை
மண்ணில் படர்ந்து சூழ்ந்து கொண்டிருந்தது
ஆங்காங்கே தவளைகளின் சத்தம்
அந்த இரவின் அமைதியில்,
நூறில் இரண்டு வீட்டில் மட்டும்
இளையராஜா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது
அந்த ராக்கோழி தூங்கும் வேளையிலும்
ஊர் சாமக்கோடாங்கிகள் ஆங்காங்கே
ஒவ்வொரு வீட்டின் முன் நின்று
குறி சொல்லிக்கொண்டு வலம் வந்தனர்
வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
ஊர் முழுக்க இருள் சூழ்ந்து
அந்த இரவை கட்டிபோட்டது சிறுஆர்ப்பாட்டமின்றி
இந்த இரவும் நிலவும்
இந்த மக்களும் மண்ணும்
இந்த பெண்களும் இறைவியும்
இந்த ஆண்களும் உழைப்பும்
இந்த மழலையும் விளையாட்டும்
இந்த ஆஞ்சநேயரும் வடமாலையும்
இந்த அம்மனும் அபிஷேக பாலும்
இந்த சாலையும் மஞ்சள் வண்ண தெருவிளக்கும்
இதில் என்ன இருக்கு..?
மனிதமும் மண்ணும் மட்டுமே
மண்ணும் மக்களும் சேர்ந்ததே அழகு
அதை ரசித்தலில் ஒரு சுகம் உண்டு
அந்த சுகத்தை நீங்கள் உணர்ந்ததால்
தனிமையை கூட காதலிக்கலாம்
எந்த இரவையும் அழகியலுடன் கடக்கலாம்
இந்த மண்ணுடனும்
நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடமும்
எல்லாவற்றையும் காதலுடன் பாருங்கள்
உங்களை சுற்றி அழகியல் சார்ந்த
விஷயங்கள் நிறைய கொட்டிக்கிடக்கிறது
வந்து உங்கள் இரு கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள்
ஏனென்றால் இது யாருக்கும் கிடைக்காத
அறிய வகை பொக்கிஷங்களுள் ஒன்று,
மண்ணும் மனிதமும் வளர்கவே 💛
Comments
Post a Comment