கார்த்திக் நேத்தா - வின்
ஃபேமஸான வரியில் இருந்து
நம்ம ரைட்அப்பை ஆரம்பிப்போம்
*
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
*
வாகாய் - Living With Comfortness
பாகாய் - உருகுதல்
தன்னை ஒரு Comfort Zone
வட்டத்திற்குள் அடைத்து தான்
தொலைத்த ஒன்றை அன்றாடம்
நினைத்து தினம் தினம் மனம்
உருகுகிறான் உள்ளுக்குள்,
அதீத அன்பில் திளைத்து
காதல் எனும் ஆழிப்பெருங்கடலில் நீந்தி
பின் பிரிவு எனும் கரை வந்து சேர்ந்த
பின் ஒருவனின் நிலை எப்படி மாறுகிறது
என்பதை பார்ப்போம்,
பிரிவோ வலியோ சம்மந்தப்பட்ட
பதிவுகள் எழுதவேணாம் என்று முடிவு
செய்து பெரிதாக எழுதாம இருந்தேன்
ஏனென்றால் மனதளவில் எனக்கும்
சில நேரம் கடந்து வந்த பிளாக் டேஸ்
நினைவுக்கு வந்து செல்வதால்,
இப்போ இந்த ரைட்அப் கூட
என் நண்பன் Prakash Veera - காக
தான் எழுதுறேன், மச்சான்,மாமா - ன்னு
கூப்பிடுற பசங்க மத்தியில டார்லிங்க
சுருக்கி "டார்லூ" - ன்னு கூப்புடுற அளவு
ஒரு பாண்ட் எங்க ரெண்டு பேருக்குள்ள,
நான்கு வருஷமா பழக்கம்ன்னு
சொல்லலாம் ஆனா இதுவரைக்கும்
நேர்ல சந்திக்கிற வாய்ப்பு எங்களுக்கு
இப்போ வர அமையல,
ஆனா அவன பத்தி எனக்கு தெரியும்
அவனுக்குள்ள இருக்க வலி பத்தியும்
நல்லாவே தெரியும், எல்லா
பசங்களுக்கும் சந்திக்கிற பிரிவு தான்
அவனோட காதல் வாழ்க்கையிலும்,
அவன் பிரிவுக்கு ஸ்பெஷல் இல்ல
ஆனா பிரிவு அவனுக்கு ஸ்பெஷல் - ன்னு
சொல்லலாம் அந்த அளவு தனக்கு
ஏற்பட்ட ஒரு இழப்பின் வலிய
தனக்குள்ளேயே வச்சுட்டு வெளில
எல்லாரையும் டார்லூ,மாப்ள - ன்னு
ரொம்ப பாசமா பேசுவான்,ரொம்ப
சீக்கிரமா எல்லார் கூடையும் அட்டாச்ட்
ஆகிடுவான்,
அப்படி பட்ட நண்பன் ஒரு விஷயம்
கேட்டா செய்யாம இருக்க முடியுமா
என்ன..?
4 படத்தோட சீன்ஸ் சொல்லி அதுல
அவங்களுக்கு ஏற்படுற பிரிவுக்கு
அப்பறம் அவங்களோட வாழ்வாதாரம்
எப்படி மாறுது இந்த சமூகத்துல அதான்
விஷயம் இது பத்தி எழுதணும் - ன்னு
சொன்னான்,
தளபதி :
நானா உன் பின்னாடி சுத்துனேன்
நானா உன்ன பார்த்து பிடிச்சுருக்குன்னு
சொன்னேன்
நானா உன் தோள்ல சாஞ்சு அழுதேன்
சுபலட்சுமி (ஷோபனா) உடனான
காதலின் பிரிவிற்கு பிறகு சூர்யா
(ரஜினி) எப்படி தன் வாழ்க்கையை
இங்கே வாழ்கிறான்..?
படத்தில் கை குழந்தையாக
இருக்கும்போதே தன் அம்மாவை பிரிந்த
சூர்யா படம் முழுவதும் மனதில்
ரணத்துடன் மிகவும் அமைதியாக முரட்டு
தனமாக வளர்ந்தவன், ஆம் ஒருவன்
தான் பிறந்ததில் இருந்து தாய் தந்தை
யாரென்று தெரியாமல் யாரோ எவரோ
கொடுத்த உணவுகளை எல்லாம் உண்டு
வழி தவறி அமைந்த ஒரு வாழக்கையை
வாழ்கிறான் அப்படி இருக்கும் தருவாயில்
அவன் பேசமாட்டான் மௌனம் தான்
அவனை முழுவதுமாக ஆட்கொள்ளும்
அப்படி இருக்கும் ஒரு முரடனை ஒருத்தி
காதலிக்குறேன் என்று வருகிறாள்
இவனை பற்றி தெரிந்தும் இவன்
வாழ்க்கை சூழல் பற்றி தெரிந்தும்
இவனும் அவள் மேல் மையல்
கொள்கிறான், இருவரும் உயிருக்கு
உயிராக காதலிக்கிறார்கள், சாதி,மதம்,
தொழில் போன்றவற்றை காரணம் காட்டி
அவள் அப்பா கல்யாணத்துக்கு எதிர்ப்பு
தெரிவிக்க அவள் இவனுடனான
காதலை முறித்து விட்டு கலெக்டர்
மாப்பிளையை கல்யாணம் செய்கிறாள்,
இதற்கு பிறகு அவளுக்கு இவன் மீது
எந்த அளவு காதல் இருக்கும் என்று
தெரியவில்லை ஆனால் இவன் வழக்கம்
போல் நண்பனுக்காக ஒரு
கல்யாணத்தை செய்துகொண்டு இழந்த
தன் தாய் பாசத்தை மட்டுமே தேடி
அலைவான், அதிலும் ஒரு நேரத்தில்
அவளை சந்திக்கும் போது "உன்ன அவர்
நல்லா வச்சுருக்காரா" என்று கேட்பான்
மனதளவில் காதல் இன்னும் அவனுக்கு
இருக்க தானே செய்கிறது, நீரோடை
போன்று காதல் அவனுக்குள் தவழ்ந்து
செல்வதால் தான் அவனால் அவளிடம்
அப்படி கேட்க முடிந்தது,பிரிவு அவனுக்கு
புதிதல்ல ஆனால் அவள் சார்ந்த பிரிவு
அவனுக்கு ஒரு பேரிடர் இழப்பு தான்
ஏனென்றால் அவளாக தேடி வந்து
கொடுத்த காதல் அல்லவா,
முடிவு :
தானாகவே முன் வந்து காதலித்த பெண்
பிறகு பெற்றோர்கள் சம்மதம்
தெரிவிக்காததால் அந்த பெண் விட்டு
சென்றவுடன் ஆண் இங்கே
தனிமைப்படுத்தப்படுகிறான்
இயற்கை :
நான்ஸி கேப்டனே வந்து
உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்
நீ குழந்தையே பெத்துக்கிட்டாலும் நான்
உன்ன விரும்புனது விரும்புனது தான்
பழுது பார்ப்பதற்கும் சரக்குகளை
ஏற்றவும் மூன்று மாதம் கப்பல்
ராமேஸ்வரம் கடற்கரைக்கு வருகிறது
அந்த கப்பலில் வேலை செய்யும் மருது
அந்த ஊரில் வசிக்கும் நான்ஸி மேல்
காதல் வசப்படுகிறான், அவளோ மூன்று
வருடத்திற்கு முன் ஒரு கப்பலின் கேப்டன்
ஆன முகுந்தனிடம் தன் காதலை
சொல்லிவிட்டு மூன்று வருடமாக அவன்
மீண்டும் வருவேன் என்று செய்த
சத்தியத்தின் பேரில் அவனுக்காக
காத்துக்கொண்டிருக்கிறாள், இங்கு
மருது காதலை சொன்னதும் முடியாது
என மறுக்கிறாள், பின் முகுந்தன்
இறந்துவிட்டான் என்ற செய்தி
தெரிந்ததும் உடன் இருப்பவர்களின்
அறிவுரை படி மருதுவை திருமணம்
செய்ய நான்ஸி சம்மதிக்கிறாள், மருது
வந்த கப்பல் கிறிஸ்துமஸ் இரவு அன்று
கிளம்ப இருப்பதால் அன்று மாலை
அவர்களது திருமணம் ஏற்பாடை
அங்கிருப்பவர்கள்
செய்திருப்பார்கள்,எதிர்பாராவிதமாக
இறந்துவிட்டான் என்று நம்பியிருந்த
முகுந்தன் மீண்டும் வந்து அவளுக்கு
மோதிரமிட்டு ஆச்சரியப்படுத்துகிறான்,
நான்ஸி முகுந்தனை பார்த்ததும் அவனை
கட்டித்தழுவி வரவேற்கிறாள், மருது
யாரிடமும் சொல்லாமல் அங்கே இருந்து
கிளம்பி ஆப்ரிக்கா செல்லும் தனது
கப்பலில் ஏறி கிளம்புகிறான்,படம்
முடிந்து விடும் ஆனால் மருதின்
மனநிலை அங்கு எப்படி இருக்கும்..?
தான் காதலித்த பெண் தனக்கு
கிடைத்துவிட்டால் அது திருமணத்தில்
முடியப்போகிறது இனி நாம்
வாழப்போகும் வாழக்கை நான்ஸியுடன்
தான், இத்தனை நாள் அவளின் இறுக்கம்
இன்று முடிவுக்கு வந்துவிட்டது
நாளையில் இருந்து அவள் தன் மனைவி
என்று மனதிற்குள் தாஜ்மஹாலே கட்டி
வைத்திருப்பான் மருது, ஆனால் அடுத்த
நாள் அவள் உனக்கு இல்லை
இன்னொருத்தன் வீட்டு மாங்கனி
இன்றிலிருந்து என்று மருதுவிடம்
சொன்னால் அவன் யாரிடம் சென்று
அழுவான் யாரை கட்டிப்பிடித்து தனக்கு
ஏற்பட்ட வலிகளை பகிர்ந்து
கொள்வான்..? கேட்பாரின்றி எப்போதும்
சிரித்த முகமாக இருக்கும் கிறிஸ்துமஸ்
தாத்தா பொம்மையை முகத்தில்
அணிந்தவாறு தன் கண்ணீரையும்
வலியையும் தனக்குள்ளேயே
மறைத்துக்கொண்டு மருது அங்கிருந்து
கிளம்புகிறான்,
முடிவு :
மனம் மாறிய காதலியின் முடிவினால்
ஒரு ஆண் இங்கே தனிமை
படுத்தப்படுகிறான்
டேவிட் :
கோடில ஒருத்தருக்கு தான்
கடவுள் வலிய தாங்குற சக்திய
கொடுத்துருக்கார்
இந்த உலகத்துல நிறைய பீட்டர்
இருக்காங்க ஆனா உன்ன மாதிரி டேவிட்
ரொம்ப கொஞ்ச பேர் தான்
தனக்கு நடந்த இருந்த திருமணத்தில்
பெண் இன்னொருவருடன் ஓடி
போனதால் டேவிட் லக் இல்லாத
ஒருவனாக ஊரில் சித்தரிக்கப்பட்டு
ஊரில் நடக்கும் திருமணம் கச்சேரி என
எல்லாவற்றிலுமிருந்து ஒதுக்கி
வைக்கப்படுகிறான், ஊர் தன்னை
ஒதுக்கி வைத்ததால் "கிறுக்கு சாண்டா"
என்ற பெயரில் ஊரில் திருமணம்
நடக்கும் இடங்களில் திருமண
தம்பதியர்களின் முகத்தில் சாண்டா
மாஸ்க் போட்டு அவர்கள் முகத்தில் குத்தி
விட்டு ஓடிவிடுவான் டேவிட், அதில்
அவனுக்கு ஒரு ஆனந்தம் அதனோடு
மதுவும், இப்படி
போய்க்கொண்டிருந்தவன்
வாழ்க்கையில் வந்தவள் தான் ரோமா
(Deaf & Mute), ஆனால் ரோமா என்பவள்
டேவிட்டின் நண்பன் பீட்டருக்காக
திருமணம் நிச்சயிக்கப்பட்டவள், ஒரு
சமயத்தில் ரோமாவிற்கு டேவிட் ஒரு
சிறிய உதவி செய்ய நட்பு ரீதியில் ரோமா
டேவிட்டிற்கு கன்னத்தில் முத்தம்
கொடுத்து கட்டிப்பிடிக்கிறாள், அதை
காதல் என கேட்க போகும் டேவிட்டிடம்
அவன் சொல்ல வருவது புரியாமல்
இன்னொருதடவையும் ரோமா
கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம்
கொடுத்து கட்டிப்பிடிக்கிறாள்,காது
கேட்காமலும் வாய் பேசமுடியாமல்
இருப்பதாலும் அவளுக்கு டேவிட் கேட்க
வந்தது புரியாமல் நேற்று செய்ததை
மீண்டும் கேட்கிறான் என நினைத்து நட்பு
ரீதியில் முத்தம் கொடுக்கிறாள், பிறகு
அவள் தன்னை காதலிக்கிறாள் என
தவறாக நினைத்துக்கொண்டு டேவிட்
அவள் மீது காதல் வயப்படுகிறான், ஒரு
பெண் முத்தம் கொடுத்தால்
பாழாப்போன ஆண் மனதுக்கு என்ன
நினைக்க தோணும், இறுதியில் பீட்டர்
ரோமா திருமணம் அங்கே திருமணத்தை
நிறுத்தி தன் காதலை ரோமாவிடம்
தெரிவிக்க போகும் இடத்தில் தான் பீட்டர்
சொல்கிறான் நான் வரதட்சணைக்காக
அவள கல்யாணம் பண்ணல, நான்
முதலில் இருந்தே அவளை
விரும்புகிறேன் என்று, ரோமாவும்
தன்னை விரும்பவில்லை பீட்டரை தான்
விரும்புகிறாள் என்று அப்போது தான்
டேவிட்டிற்கு தெரிய வருகிறது, பிறகு
அவர்களின் திருமணத்தை அவன்
நிறுத்தவில்லை, திருமணம் முடிந்து
எல்லோரும் கிளம்புகிறார்கள், அங்கே
திருமணம் நடத்தி வைத்த பாதிரியார்
(ஜீவா - இன்னொரு டேவிட்) டாக வந்து
இந்த டேவிட்(விக்ரம்)டிடம்
சொல்கிறார்,டேவிட் என்ற நீ எவளோ
பெரிய லக்கி மேன் என்றும் யாருமே
செய்யாத ஒன்றை டேவிட் என்ற பெயரில்
அவன் செய்தது பற்றியும், பிறகு மீண்டும்
கிறுக்கு சாண்டா முகமூடி அணிந்து தன்
வலிகளை தனக்குள் புதைத்துக்கொண்டு
அங்கே சாலையில் நின்று கொண்டிருந்த
ஒரு திருமணத்தம்பதியர்களை வழக்கம்
போல் முகத்தில் குத்தி விட்டு டேவிட்
தன்னுடைய சாண்டா மாஸ்க்குடன்
அங்கிருந்து விடை பெறுகிறான்,
பாதிரியார் டேவிட் சொன்ன
இவனுக்கான வாக்கியம் தான் இவனை
இந்த நிலைக்கு மாற்றியது, ஆனால்
வலியென்றும் தீராத வடுவாக தானே
அவன் மனதிற்குள் இருக்கும், அந்த
வலியை பிறரிடமிருந்து மறைத்து
தன்னை தானே காயப்படுத்திக்கொள்ள
அவன் எடுக்கும் முயற்சி தான் சாண்டா
மாஸ்க் அணிவது,
நட்பு ரீதியோ காதல் ரீதியா அவள் முத்தம்
கொடுக்காமல் இருந்திருந்தால்
பாழாய்ப்போன டேவிட்டின் மனதில்
மீண்டும் ஒரு முறை காதல்
பிறந்திருக்காது,
முடிவு :
ஒரு பெண் கொடுக்கும்
முத்தத்தின் தவறான புரிதலினால்
ஆண் இங்கே தனிமை
படுத்தப்படுகிறான்,
சோலோ :
Will You Still Love Me..? நாளைக்கு இன்னொருத்தனுக்கு நீ
பொண்டாட்டி ஆக போற அப்போ Will You
Still Love Me..?
ராணுவ பயிற்சி படையில் இருக்கும்
ருத்ராவும் அந்த பயிற்சி படையில்
ராணுவ மேலதிகாரியின் மகள்
அக்ஷராவும் காதலிக்கிறார்கள்,
ருத்ராவின் Attitude அக்ஷரா அப்பாவிற்கு
பிடிக்காமல் போக ருத்ராவிற்கு
எச்சரிக்கை விடுகிறார்,பிறகு
ஆஸ்திரேலியா சென்று
படிக்கப்போவதாக அக்ஷரா
கூறுகிறாள்,லாங் டிஸ்டன்ஸ்
ரிலேஷன்ஷிப் என்றாலும் நம் காதல்
உறுதியானது என்று வசனம் பேசியவள்
அங்கு சென்ற அடுத்த நான்கு வருடங்கள்
ருத்ராவை மறந்துவிட்டு நான்கு
வருடத்திற்கு பிறகு இன்னொரு போலீஸ்
காரனுடன் திருமணத்திற்கு சம்மதம்
தெரிவிக்கிறாள், நான்கு வருடம்
அவளின்றி தனிமையில் தவித்த
ருத்ராவிற்கு அவள் ஏன் பிரிந்து
சென்றால் என்ற பதில் கடைசி வரை
கிடைக்கவில்லை, பதில் கேட்பதற்காக
ருத்ரா தன் ராணுவ நண்பர்களுடன்
அக்ஷரா வீட்டிற்கு சென்று அவளிடம்
பதில் கேட்கிறான் அவள்
சொல்லவில்லை,பிறகு அந்த
மாப்பிள்ளை போலீஸ்காரனுடன்
சண்டையிடுகிறான், பிறகு ருத்ராவின்
அம்மா நடந்தவற்றை விளக்குகிறார்
ருத்ராவின் அப்பா அக்ஷராவின்
அம்மாவுடன் இளம் வயதில் தகாத உறவு
வைத்திருந்ததாகவும் அதன் பெயரில்
பிறந்தவள் தான் இந்த அக்ஷரா என
நினைக்கிறேன் என ருத்ரா அம்மா கூற
ருத்ரா மனம் உடைந்து போகிறான்
ஆனால் இந்த உண்மை அக்ஷராவிற்கு
தெரியாதுன்னு என நினைக்கிறன்
என்றும் கூறுகிறாள்,பிறகு அக்ஷராவின்
திருமணத்தை நேரில் பார்த்துவிட்டு
அவள் அவனுடன் சந்தோஷமாக
இருக்கும் நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு
ருத்ரா அங்கிருந்து கிளம்புகிறான்,ஒரு
வேலை ருத்ரா அம்மா சொன்னது போல்
அக்ஷராவிற்கு எந்த உண்மையும்
தெரியவில்லை என்றால் அவள் ஏன்
இவனை நான்கு வருடம் விட்டு சென்று
தவிக்க விட வேண்டும்..? இவன் ஏன்
வலிகளை சுமந்துகொண்டு தினம் தினம்
மனதில் நிம்மதி இல்லாமல் கிடக்க
வேண்டும்..?
அரசியே நல்வாழ்வு நினைக்கும் என்
மனம் என்ற வரியில் எத்தனருத்ராக்கள் இங்கே இருக்கிறார்கள்,
முடிவு :
ஒரு பெண்ணின் ஆழ்ந்த
மௌனத்தால் ஆண் இங்கே
தனிமைப்படுத்தப்படுகிறான்,
விஷயம் என்பது இது தான்
காதலுக்கு பிறகு அந்த பெண் விட்டு
சென்றவுடன் மன ரீதியாகவும் மிகுந்த
வலியுடனும் ஒரு ஆண் இங்கு எந்த
அளவு ஒரு பேரிடரை தன் வாழ்வில்
சந்திக்கிறான் என்பது தான், அதிலிருந்து
அவன் வெளிவருவது இல்லை, அந்த
வலியை மனதுக்குள் வைத்துக்கொண்டு
தான் சந்திக்கும் பிறரிடம்
புன்னகைத்துக்கொண்டே தன் நாட்களை
ஒவ்வொரு ஆணும் கடந்து கொண்டு
தான் இருக்கிறான்,
ஆண் அவன் வாழ்வில் சந்தித்த
பிரிவுக்கு பிறகு அவன் வாழ்வின்
அதற்கடுத்து அமையும் பயணங்கள்
முழுவதும் அவன் தேடி செல்லாத
வழித்தடங்களே,
ஆண்கள் சபிக்கப்பட்டவர்கள்
அதில் என் நண்பன் பிரகாஷை போல்
ஆயிரம் ஆயிரம் பிரகாஷ்கள் இங்கே
ஒரே நேர்கோட்டில் நின்று
கொண்டிருக்கிறார்கள்,
*
தனிமை ஒரு போதை
பிரிவு அப்போதையின் உச்சம்,
Comments
Post a Comment