யாருக்கும் சிறு தீங்கும்
நினைக்காதவன் அவன்
மனதளவிலும் காயப்படுத்தக்கூடாது
என நித்தமும் நினைப்பவன் அவன்
பணம் பெயர் புகழ் எதற்கும்
ஆசைப்படாத நிராயுதபாணி அவன்
அன்பையும் கருணையையும் மட்டுமே
பிறருக்கு தானம் செய்பவன் அவன்
புள்ளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிக்கு
கூட துரோகம் விளைவிக்காதவன் அவன்
இசையில் மூழ்கி பாடல்களின் வரிகளுக்கு
தன்னை பொருத்திப்பார்க்கும் ரசிகன் அவன்
தேன் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து
குழந்தைகளின் சிரிப்பை கவரும் கள்வன் அவன்
ஜோடியாய் சுற்றி திரியும் காதலர்களை
பார்த்து கள்ளங்கபடமில்லா சிரிப்பவன் அவன்
காண்கின்ற யாவையும் எழுத்துக்களாக
உருவம் கொடுக்கும் திறன் உள்ளவன் அவன்
ரோஜாவின் மொட்டுக்களை விட அதன்
முட்களின் மேல் காதல் கொள்பவன் அவன்
அப்பாவின் மிதிவண்டி பெடலை சுற்றி
பார்த்து காலத்தை கடந்து வந்தவன் அவன்
அம்மா குளிப்பாட்டும் சீகைக்காய்
குளியலை நினைத்து பார்ப்பவன் அவன்
உடன் இருந்து குழி பரித்த தோழனையும்
பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டவன் அவன்
வறுமையான காலத்தில் உணவளித்த
கல்லூரி நண்பனை போற்றுபவன் அவன்
புத்தக வாசிப்பை நேசிக்கும்
அருமையான தமிழ் வாசிப்பாளன் அவன்
பிறரை எழுதுங்கள் என சொல்லி
வலிக்கு வழி தேடி கொடுக்கும் பயணி அவன்
தனிமையை ரசிக்கும் இரவுகளின்
அழகை சொல்லும் தேவதூதன் அவன்
இவ்வளவு இருந்தும் செய்யாத பாவம்
அவனை ஏன் கழுகு போல் வட்டமிட்டு
சுற்ற வேண்டும்..?
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத
வாழ்க்கையில் அவன் அடுத்த உயரத்திற்கு
முன்னேற முடியாமல் தடையாய் இருப்பது
செய்யாத பாவங்களும் மனதில் இருக்கும்
ஆறாத காயங்களுமே,
இன்று பிணம் போல் நடமாடுதல்
என்பது அவன் வாழ்க்கை படலத்தின்
வெறுமைக்கான கோரத்தாண்டவங்கள்,
ஓட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது
அவனின் இந்த நிலை மாறு(ம்)(மா)(மோ),
காத்திருக்கிறான் காலத்தின் பிடியில்
தன் வலிகளை மறைத்து உங்களில் ஒருவனாக,
Comments
Post a Comment