கொட்டும் பனி விழும் இரவு அது
ஆனால் இரவிலும் பகல் போல்
ஆட்கள் அவ்வப்போது பயணித்து
கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின்
ஐ.டி கம்பெனிகள் நிறைந்த சாலை அது,
அங்கிருக்கும் ஒரு ஐ.டி கம்பெனியில் அன்றைய வேலை நேரம் முடிந்து நளனும் நந்தினியும் வெளியே வருகின்றனர், நேரம் சரியாக இரண்டு மணி ஏழு நிமிடங்கள்,அடுத்த இரண்டு நாட்கள் வீக்கெண்ட் விடுமுறை என்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமை இரவுகளில் கொஞ்சம் நேரம் இருவரும் பேசிவிட்டு வழக்கமாக போகும் அங்கே பக்கத்தில் இருக்கும் சரவணன் அண்ணன் டீக்கடைக்கு சென்று விட்டு பல கதைகள் பேசிய பின்னர் தான் வீடு திரும்புவார்கள்,
சின்ன வயசுல அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்கப்போ ரோஸ் கலர் கைக்கடிகார ரப்பர் மிட்டாயை நம் கையில் ஒட்டி விட்டு மிட்டாய் வியாபாரம் செய்யும் தாத்தாவை பார்த்ததும் வர சந்தோஷம் தான் நளனுக்கு இருக்கும்,ஐந்து நாட்கள் வேலைல இருந்த பிரஷர் எல்லாம் மறந்து அடுத்த ரெண்டு நாளைக்காக வெள்ளிக்கிழமை இரவுகளிலிருந்தே ஆயத்தம் ஆவான்,
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இருவரும் வெளியில் வந்தவுடன் நந்தினி நளனை பார்த்தாள்,வழக்கமாக பெட்டர்மாக்ஸ் லைட் எரியும் நளனின் முகம் அன்று மின் வெட்டு ஏற்பட்டது போல் பொழிவின்றி காணப்பட்டது,
நளனின் நண்பனிற்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதால் கையில் இருக்கும் காசை வைத்து நண்பர்கள் அவனுக்கு செலவு செய்த காரணத்தினால் மிச்சமிருந்த பணத்தையும் ஊரில் தனியாக இருக்கும் அம்மாவின் தேவைக்கு நளன் அனுப்பி வைத்து விட்டதால் இப்போது அவனிடம் சுத்தமாக கையில் காசு இல்லை என்பதால் தான் இப்படி இருக்கிறான் என்று நந்தினி புரிந்து கொண்டாள்,
அதற்கு காரணம் வெள்ளிக்கிழமை இரவுகளில் சரவணன் அண்ணன் டீக்கடையில் இருவரும் டீ மற்றும் அங்கிருக்கும் தேங்காய் பன் என எல்லாம் நளன் தான் செலவு செய்வான், நந்தினி காசு கொடுத்தாலும் நளன் கொடுக்கவிடமாட்டான், அவர்கள் இருவருக்குள் எப்போதும் இவன் செலவு செய்வது என்பது அவனுக்கு என்னமோ அவ்வளவு பிடித்தமான செயல்,அதே நேரம் நாளை தருகிறேன் என்று சொன்னாலும் டீக்கடை சரவணன் அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டார் ஏனென்றால் இவர்கள் வழக்கமாக செல்லும் கடை தான், அதிலும் சரவணன் அண்ணன் நளனுக்கு உடன் பிறவா சகோதரன் மாதிரி தான், ஆனா நளனுக்கு கடன் வைப்பது என்பது பிடிக்காது,
ஆக அன்று சுத்தமாக காசு இல்லாததால் இதை எப்படி நந்தினியிடம் சொல்வது என நளன் கொஞ்சம் மந்தமாக காணப்பட்டான்,இதை முன்னதாகவே நந்தினி புரிந்துகொண்டதை அவனிடம் சொல்லி நளனை சமாதானம் செய்கிறாள்,
ஹ்ம்ம், நான் செலவு பண்ண உனக்கு இப்போ என்ன பிரச்சனை..இப்போ உங்க அம்மாவ எடுத்துக்க சின்ன வயசுல இருந்து நீ கேக்குற எல்லாமே உனக்கு வாங்கி கொடுப்பாங்க, ஒரு ஸ்டேஜ்க்கு அப்பறம் நீ ️வளர வளர அவங்ககிட்ட காசு இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு நீ ஆசைப்பட்ட நிறைய விஷயத்த அவங்ககிட்ட கேட்காமயே விட்ருவ, உதாரணத்துக்கு தீபாவளிக்கு புது ட்ரெஸ், அம்மாகிட்ட காசு இருக்காதுன்னு நீ அந்த வருஷ தீபாவளிக்கு ட்ரெஸ் கேட்காம இருப்ப, ஆனா உங்க அம்மா தீபாவளி அன்னக்கி ராத்திரி உனக்கு சர்ப்ரைஸா புது ட்ரெஸ் வாங்கித்தருவாங்கள,அந்த மாதிரி தான் இத்தனை நாளா நளன் வாங்கிக்கொடுத்துட்டு இருந்த இந்த டீயும் தேங்காய் பன்னும் இன்னக்கி ஒரு நாள் நந்தினியோட ட்ரீட்,
நல்லா பேச கத்துகிட்ட ஹ்ம்ம் என நளன் நந்தினியிடம் சொல்லினான், பின்னர் இருவரும் டீயும் தேங்காய் பன்னும் சாப்பிட்டு முடித்து விட்டு அவர்கள் ஹாஸ்டல் இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்,
இந்த மாதிரி மிட்நைட் டைம்ல ரோட்ல ஆளே இல்லாதப்போ எனக்கு டான்ஸ் ஆடணும்ன்னு சின்ன வயசுல இருந்து ஆசை ஹ்ம்ம், பட் கூச்சமா இருக்கும்ன்னு நந்தினி நளனிடம் கூறினாள்,
ஆசைப்பட்டது வேணும்னா கூச்சம் இருக்கவே கூடாது, ஆடணுமா ஆடு, இங்க யார் இருக்கா ரோடே காலியா தான் இருக்கு, நான் மட்டும் தான் உன்கூட இருக்கேன்,நீ ஆடு நான் வேணும்ன்னா பாடுறேன், எனக்கு இந்த மாதிரி டைம்ல பாட பிடிக்கும்,
நந்தினி : ஹே, சூப்பர் மா!
பாடிக்கிட்டே ஆடலாம் அப்போ..?
நளன் :
கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃபுயூஷன் ஆகிறேன்
உள்ளுக்குள்ளே,
பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே..!!!
Comments
Post a Comment